சோகத்திலும் ஒரு பங்கு........ம...ரணம். மரணம் தவிர்க்க முடியாததுதான். அதுவே எதிர்பாராமல் ஏற்படும்போது. அதுவும் வாழ்வில் எத்தனையோ கடமைகளை எதிர்நோக்கியுள்ள குடும்பத்தில் ஏற்பட்டுவிடும் போது. எத்தனை அதிர்ச்சியை கொடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒருநிகழ்வு விளங்கியது.
சிரித்து சிரித்து பேசும் என் உறவினர் ஒருவர், பீடி, சிகரெட், தண்ணி போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் என அனைத்து தரப்பிலும் தரம் உயர்ந்தவர். ஒரே மகன். எல்லாக் குடும்ப வேலைகளையும் தானே செய்து வந்து மனைவியை ராணி மாதிரி பார்த்துக் கொண்டார். மனைவியின் குடும்பம் மற்றும் தன் குடும்ப பொறுப்புக்களை தானே முன்னின்று செய்து குடும்பத்திலும் முன்னிலை வகித்தார். அவர் திடீரென இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சி செய்தி. விசாரித்ததில் நெஞ்சு எரிகிற மாதிரி இருக்குதுன்னு சொன்னாராம். தைலம் போட்டு தேய்த்து விட்டு உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்றார்களாம், அவர் இறந்து ஓருமணி நேரம் இருக்கும் எனச் சொல்லி கை விரித்துவிட்டாராம்.
காலையில் 9மணிக்கு எங்கிட்டக்கூட நல்லா பேசிக்கிட்டிருந்தார் சார், என்ன சார் அநியாயமாக இருக்கு 9 மணிக்கு இருக்கிறார் 10 மணிக்கு இல்லை. 9.15 க்கு பைக்கில் போவதை பார்த்தேனே சார் என பதைபதைக்கும் நண்பர். இன்று இறந்துவிடுவேன் என நேற்றே தெரியும்போல் உள்ளது. அதனால்தான் என்றுமில்லாமல் நேற்று உனக்கு டீ வாங்கி கொடுத்து பிரியவே மனமில்லாமல் பிரிந்தாயா? என மற்றொரு நண்பர். அப்பா அப்பா என்னை டாக்டருக்கு படிக்க வைக்க போவதாக கூறுவீர்களே யாரப்பா என்னை இனி படிக்க வைப்பா என பத்து வயது மகன் பதறும் போதும், என்னையும் கூட்டி போகாமல் நீங்கள் மட்டும் எங்க போனீங்க மாமா, என மனைவி கதறும் போதும், அது தவிர உறவுகளைச் சொல்லி பெண்கள் ஒப்பாரி வைத்து புரள்வதை பார்க்கும் போதும் ஒவ்வொரு முறையும் நமது இதயம் நுழைந்து இறக்கம் கண்ணீராக வெளிவருகிறது. சாவே உனக்கு ஒரு சாவு வந்து சேராதா என கேட்க தோன்றுகிறது.
நம்மோடு அவர் பகிர்ந்த பாச நேரங்களை நினைத்து பார்க்க வைக்கிறது. உலக வாழ்வின் உண்மைகளை உணர வைக்கிறது. மனம் ரணமாக உள்ளது. எல்லாமே எல்லோரும் ஒருசில நாட்கள் தான் என நினைத்து ஆறுதல்பட வேண்டியதாகவுள்ளது. தவிர்க்க முடியாமல் கண்ணதாசன் பாடல் வரிகள் மட்டும் ஆறுதல் சொல்ல வருகிறது. போனால் போகட்டும்.
கடமைகளை சுமந்து வாழும் பலர் தன் உடல் நலம் பேண மறந்து விடுகிறோம். நான் உட்பட. தயவு செய்து நண்பர்களே உங்களை நீங்களே கவனித்துக் கொண்டால்தான் நீங்கள் பிறரை கவனிக்க முடியும். கவனம்.