Monday, November 1, 2010

ஒரு எழுத்துப் பிரச்சனை...ங்க...

எல்லோருக்கும் வணக்கம். நான் நலம். நீங்க நலமா...பார்த்துப் பேசி ரொம்ப நாளாச்சு. எதையாவது பேசனும் அப்படின்னு நெனைச்சுகிட்டு இருந்தப்போ..மாமா என்ற அழைப்புடன் உறவினர் ஒருவர் வந்திருந்தார். வாங்க..வாங்க என வரவேற்று அமரவைத்துபோது.. அழகா தட்டத்தில் தண்ணிருடன் உங்க மொழியில் தங்கமணி.. தண்ணிர் கொடுத்தபடி வரவேற்பு... காபி சாப்பிடுகிறீர்களா?, சாப்பிட்லாம்ங்க....நேற்று இங்க நல்ல மழை போல இருக்குதுங்க.. நம்ம ஊருபக்கம் மழை இல்லைங்களா.? இங்கே போல இல்லைங்க..சும்மா சர்வ வெள்ளம் போல... இப்படியே போச்சுன்னா.. குடிதண்ணிக்கே திண்டாட்டம் வந்திரும்ங்க....புதிதாக பார்க்கிறவர்கள் யாரும் இப்படித்தான் பேச்சை தொடங்குவார்கள்..

ஒரு விசயமாய் உங்களை பார்க்கலாம்மின்னு வந்தேனுங்க..எனது மகள் ஹரிணி பிறப்புச் சான்றிதழில் ஒரு தப்பு ஏற்பட்டு விடட்துங்க..அதை அப்ப சரியா பார்க்காமல் படிக்காமல் விட்டது தப்பா போச்சுங்க..என அவரின் மகளின் பிறப்புச் சான்றிதழை எடுத்துக்காண்பித்தார். எனது பெயரையும் எனது மகளின் பெயரையும் சரியான உச்சரிப்புடன் பதிவு செய்து கொடுத்துள்ளார்கள். எனது மனைவி பெயரை கோகிலவாணி என்பதை கோகிலமணி என்றுபதிந்து இருக்கிறது. என் மனைவியின் பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை அனைத்திலும் கோகிலவாணி என்றே உள்ளது..என்ன செய்யலாம்..மாற்றலாமா..இப்படியே விட்டு விடலாமா.. இதில் ஒண்ணும் பிரச்சனையில்லைங்க.. ஒரே எழுத்துத்தான் பிரச்சனை.. நம்ம மனசுக்குள்ள ஒரு மகிழ்ச்சி..ஆகா..வேலை இல்லாம வீட்டில் அதைஎடு.. இதை கொண்டா.. அப்படின்னு அதிகாரம் பண்ணி காலத்தை கடத்துவதிலிருந்து இரண்டு நாளைக்கு விடுதலை.. கவலையை விடுங்க..மாமா எதற்கு இருக்கேன்..நான் பார்த்துக்கொள்கிறேன். முகவரி சான்றுகொடுத்து பெயரை மாற்றி கொள்ளலாம் எனச் சொல்லி...கவனமா படியுங்கள்..நகலை மட்டும் கொடுத்து விட்டு செல்லுங்கள்..மீதியை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி விட்டேன்.

மறுநாள் அய்யா அதி காலையில் எழுந்து சுபயோக சுபவேளை பார்த்து திருத்த பிறப்புச் சான்றிதழ் வாங்க 35 கி.மீ தொலைவிலுள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றேன். காலை மணி 10.30. பிறப்பு இறப்பு பதிவாளர் அறை திறந்தே இருந்தது. யாரையும் காணோம். சரி எங்காவது காபி..கீ.பி..சாப்பிட சென்று இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு நின்று கொண்டே இருந்தேன். கடிகாரம் ஓடிக் கொண்டே இருந்தது. யாரும் வருவதாக தெரியவில்லை. மே18 யே பொறுத்தவன் இதை பொறுக்க மாட்டேனா. சரியாக 12.24 உதவியாளரைப் போல் ஒருவர் ஒடி வந்து எதையோ எடுத்துக்கொண்டு ஒடினார். ஏதாவது கேட்கலாம் என்றால் ஆள் ஒடியேவிட்டார். சரியாக மணி 1.20 இரண்டு பேர் வந்தார்கள்.ஒருவர் ‘என்னங்க வேணும்? எனக்கேட்க, நான் என் கையில் இருந்த விண்ணப்பத்தை காட்ட..

அதை படித்து விட்டு...அடடே.. ஒரு எழுத்து பிரச்சனை.. சார் அங்கே செல்போன் பேசிக் கொண்டு இருக்காரே அவர்தான் உங்க பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றார். அவரைப் பார்த்தேன். அவரோ இன்னொரு பத்து நிமிடம் எடுத்துக்கொண்டார். செல் போனும் கையுமாகவே இருந்தார். இடையில் குறுக்கிட்டால் ‘இன்று போய் நாளை வா’ என சொல்லி விடுவாரோ என்ற பயம். அவரே பேசி முடித்து விட்டு என்னை பார்க்க..நான் உடனே விண்ணப்பத்தை கொடுக்க

அவர் வாங்கி படித்து விட்டு...நாங்கள் எற்கனவே கொடுத்த அசல் சான்றிதழை கேட்டார். நான் ‘அசல் எடுத்து வரவில்லைங்க’ எனச் சொல்ல. அவர் ‘அப்படியா..அப்ப அசல் சான்றிதழ் எடுத்து கொண்டு நாளை வாருங்கள்’ என்றார். எனக்கு சுருக்கென்றது. தப்பு நம்ம மேலேதான் என எண்ணிக்கொண்டு, நம்ம மாப்பிள்ளைக்கு அடித்தேன் போனை. ‘என்னங்க அசல் சான்றிதழை கொடுக்காம போய்விட்டிர்கள்’ என்றேன். ‘நீங்கதானே மாமா நகலைமட்டும் கொடுங்க போதும்’ என்றீர்கள். ‘அப்படிங்களா..தெரியாம சொல்லிட்டேன்.. நாளைக்கு என்னிடம் சேரும்படி அசலை கொடுத்து அனுப்புங்கள்’ என்றேன். சரிங்க ஒருநாள் எப்படியோ நகர்ந்துவிட்டது.

அடுத்த நாள் காலை ஆள்கின்றவரை வணங்கிவிடடு. அசல் சான்றுடன் சரியாக பத்து மணிக்கு சென்றேன். நம்ம அதிகாரி இருந்தார். நல்ல நேரம் என எண்ணிக் கொண்டு வணக்கம் வைத்தேன். அசல் சான்றுடன் வந்திருக்கிறேன் என்றேன். நம்மை ஏற இறங்க பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரம் பொறுங்க அறைச்சாவி வரட்டும் என்றார். சாவி வந்தது. உள்ளே சென்று நம்ம விண்ணப்பத்தை ஆய்வு செய்தார். வெளியே வந்து, அய்யா குழந்தை பிறந்த மருத்துவமனையிலிருந்து திருத்த அறிக்கை பெற்று வரவண்டும் என்றார். நான் ‘ஏன்?’ என்றேன். ‘பின்னே’ என்றார். ஓ..நமக்கு நேரம் சரியில்லை என்ற நம்பிக்கையில் தெரிந்த நண்பர் தயவில் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்றேன். விசயத்தை சொன்னேன். ஒண்ணும் பிரச்சனையில்லை கோகிலவாணி என்ற பெயருக்கு புருப் நகலுடன் எழுதிக் கேட்டார்கள். நல்லவேளை ஓட்டுனர் உரிமம் கையில் இருந்தது. எழுதிக் கொடுத்தவுடன் வாங்கி கொண்டு ‘இன்று போய் நாளை வாங்க’ என மரியாதையாக சொன்னார்கள். மரியாதையா சொன்னதால் மரியாதையாய் வீடு திரும்பினேன்.

அடுத்த நாள் ஆண்டவர்களையும், ஆள்பவர்களையும் நினைத்துக் கொண்டு மருத்துவமனையில் திருத்த அறிக்கையுடன் சென்றேன். அய்யா அன்புடன் வரவேற்றார். வாங்கிப் பார்த்தார். விண்ணப்ப வில்லை ஒட்டி பெட்டியில் போடச் சொன்னார். அவர் சொன்னதையெல்லாம் செய்தேன். எப்ப வருவதுங்கு எனக் கேட்டேன். மறுநாள் மாலை வரச்சொன்னார். சென்றேன்..வென்றேன்...

சான்றிதழிலுடன் வெற்றிப்புன்னகையுடன் வெளியே வந்தேன். வம்பர் ஒருவர் சந்தித்தார். மகிழ்ச்சியுடன் தேநீர் வாங்கி கொடுத்து நலம் விசாரித்ததார். என்ன விசியமா வந்தீங்க என்றார். நான் ஒரு வாரமாக அலைந்து ஒரு எழுத்தை திருத்த கதையைச் சொன்னேன். ‘அடப் போய்யா, நீயெல்லாம் எப்படியய்யா அரசு பணியில் இருந்தாய் ஒரு இருநுறு ருபாயை கொடுத்திருந்தால் அன்றே அந்த சான்று கிடைத்திருக்கும்’ என்றார். நண்பா கொடுக்க நான் ரெடி, யாரிடம் கொடுப்பது. யாரும் என்னிடம் கேட்கவில்லையே என்றேன். ‘இதையெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். நாம் தான் கொடுத்து நம்ம இந்திய மானத்தை காப்பாத்தனும்’ என்றார். ‘அப்படிங்களா..’என கேட்டு விடைபெற்று வீடு திரும்பினேன்.

வீட்டுத்தொலைக்காட்சியில்..........சுத்துதே சுத்துதே பூமி..போதுமடா போதுமடா சாமீ.. என்கிற பாட்டு. இதனால் அறிவிப்பது என்னவென்றால் சொந்தங்களே... பிறப்பு இறப்பு சான்றுகள் பெறும்போதே கவனமா பொறுமையா எழுத்துக்கு எழுத்து படித்து வாங்குங்கோ. அப்படி வாங்கின்னா உங்க வீட்டில் யாருக்கேனும் ஒரு வாரம் அலைச்சல் மிச்சம் சொந்தங்களே. தீபாவளி யாராவது கொண்டாடினால் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன்...சுனா..பானா.

***********************************************