Wednesday, June 16, 2010

சினிமா..ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே...

சினிமா..சினிமாவே பார்த்திராதவர் என்று உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? அதிசயமான கேள்விதான். எனது நண்பன் ஒருவன் இதுவரை ஒரு சினிமாக்கூட பார்த்ததில்லை. அவனுக்கு வயது 57. B.A.B.Ed., படித்துள்ளார். அது சரி..தண்ணி போடுவாரா? இல்லை.. சிகரெட்..புகையிலை.. வகைகள்..இல்லவே இல்லை.. கவுண்டமணி பாணியிலே கமெண்ட் கொடுக்கறீங்களா? கவலையே இல்லை. இப்படியும் சிலர் உங்களோடும் இருக்கத்தான் செய்வார்கள்.

நாம சினிமா ஞாயத்திற்கு வருவோம். சினிமாவைப்பற்றி யோசிப்போம். நம்ம வாழ்க்கையிலே இந்த சினிமாவை முதன் முதல் எப்ப பார்த்தோம். ஏதாவது நினைவு வருகிறதா? ஏதோ கொஞ்சம் ஞாபகம் வருகிறது. எங்கள் ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவில்... (அப்பவெல்லாம்..மைல்தானுங்க.. அதற்கு பின்னாலதான் கிலோமீட்டர்..ஒ..உங்களுக்கு கி.மீ. ல சொன்னாத்தான் புரியும்..சரி.சரி..3.கி.மீ.) தொலைவிலுள்ள வசந்தா தியேட்டருதான் எனக்கு சினிமாவை காட்டியது. அது சரி..முதன் முதலில் யார் சினிமாவுக்கு கூட்டிச் சென்றார்கள்..படுத்துகிட்டே யோசித்து கண்டுபிடித்து விட்டோமல்ல. விவசாய தொழிலாளர்கள், பல்வினை கலைஞர்கள் அதிகமாக அன்றும் இன்றும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் எங்கள் கிராமத்தில் ஒரு தச்சு தொழில் கலைஞர் தான் என்னை சினிமாவுக்கு முதன்முதலில் அழைத்துச் சென்றார். படம் என்ன? யாரோ இரண்டு பேர் தண்ணீருக்குள் சண்டை போடும் காட்சி மட்டும் உடனே ஞாபகத்திற்கு வருது.

எம்.ஜி.ஆர் முகம் மட்டும் டக்குன்னு தெரியுது. ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்து விட்டோம்ல்ல. நான் பார்த்த முதல் படம் நல்லவன் வாழ்வான். இறுதி காட்சியில் எம்.ஜி.ஆர்க்கும் எம.ஆர். ராதாவுக்கும் தண்ணீர்க்குள் ஃபைட் நடக்கும்.... ஃபைட்டுன்னு சொன்னாத்தான் ஒரு எபக்ட் கிடைக்குதுல்ல. நாங்க அப்ப இருந்துல்ல தமிழை வளர்த்து வைத்திருக்கிறோம். எங்களுக்கு படிப்பறிவு இல்லாததால் எங்களிடம் பேசினார்கள். நாங்கள் அறை குறை படிப்பு..உங்களிடம் பேசி சொல்லி கொடுத்தோம். நீங்க அப்படியா? நல்ல தமிழை உங்க குழந்தையுடன் பேசிப்பாருங்கள்..தமிழ்தானே வளரும்... கிழவன் சொன்னா கிண்ணாரக்காரனுக்கு ஏறுமா? (பழமொழிக்கு தனி கதை இருக்கு...)

உங்க குழந்தை மம்மீ..டாடீன்னு சொல்ல வைத்து அழகுபார்க்கிறவங்களாச்சே நீங்கள்..எங்க காலத்திலே அப்பான்னு கூட சொன்னதில்லை. ‘அய்யன்’னு சொல்ல சொல்லுவாங்க. இன்றும் எங்க அய்யன் அப்படின்னுதான் சொல்ல வருதுங்க. என் குழந்தையிடம் அப்பான்னு சொல்லுன்னா சொல்லமாட்டுது. நர்சரியில் டாடீன்னு சொல்லி கொடுத்து அப்பான்னா கேலியா தெரியுற அளவுக்கு ஆயிடுச்சி. ஆரம்பத்திலேயே திருத்தாதது எங்க தப்புதான். ஆனா நீங்க மெத்த படித்தவங்களாச்சே. நாங்க செய்த தப்பையே நீங்களும் செய்திட வேண்டாம். இன்று முதல் வீட்டில் மட்டும் தனித்தமிழ் பேசிப்பழகலாம். ஆரம்பத்தில் சங்கடமாக கூட இருக்கும். போக போகச் சரியாகும்.

கிராமத்தில் ஆரம்பத்தில் எல்.டீ பேங்க் அப்படீன்னாத்தான் தெரியும். நில வள வங்கி அப்படீன்னு அரசு பெயர் மாற்றிய போது சங்கடமாத்தான் இருந்தது. இப்ப எல்.டீ பேங்க்ன்னா என்னன்னே தெரியாது. ஆரம்பத்தில் அரசும் பெயர்களை மாற்றி தமிழை வளர்க்க பார்த்தது. ஆனால் வீட்டில் தமிழை வளர்க்க மறந்து நர்சரி பள்ளிகளிடம் தமிழை வளர்க்க விட்டுவிட்டது. அதனால்தான் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றியும் நாம் பஸ் ஸ்டேண்டுலேயே நிற்கிறோம். சினிமாவிலே ஆரம்பித்து சினிமா தமிழை வளர்க்க பயன்படுது. நல்லதுதானே.

விபரம் தெரிந்த பின்பு பூம்புகார், பூமாலை, அவன் பித்தனா? என சுயநலமில்லாவரின் தமிழ் வரிகளுக்காக தேடி ஓடிஓடி சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று சுயநலத்துடன் கூடிய தமிழ்வரிகள் பெண் சிங்கமாக தோற்குது. அந்த கரகரத்த குரலில்..பூம்புகார்..இதுதான் இன்றைய பூம்புகார்...காவேரி புகும் பட்டிணம் எத்தனையோ ..என ஆரம்பித்த வரிகளை மனப்பாடம் செய்து ஒப்பித்து பாராட்டு வாங்குவேன்..ஆனால்.. வேண்டாங்க விடுங்க......

எங்களுரிலிருந்து நானும் சில நண்பர்களும் மிதிவண்டியில் பழனி சென்று ஒரே நாளில் நான்கு சினிமா பார்த்தோம். காலை பத்து மணி நான் ஆணையிட்டால், மதியம் மோட்டார் சுந்தரம்பிள்ளை, இரவு முதல் காட்சி அன்பே வா, அடுத்து இரவுக்காட்சி சித்தி..பார்த்து 35 கி.மீ திரும்பி வந்து காலையிலே நல்ல குடி நாச்சி மாதரி பள்ளிக்கு சென்று விடுவோம். எங்க காலத்திலே வந்த சினிமாக்களை நினைத்தாலே இன்னைக்கும் இனிக்குதே. பாசமலர்,பாகப்பிரிவினை,படிக்காத மேதை..போன்ற சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த ப வரிசை திரைப்படங்கள், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத்தட்டாதே, தாலிபாக்கியம் என எம்.ஜி. ஆரின் தா வரிசை திரைப்படங்கள், நெஞ்சில் ஒரு ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, பஞ்சவர்ணக்கிளி போன்ற நெஞ்சை தொட்ட திரைப்படங்கள் , திருவிளையாடல்,கந்தன் கருணை என A.P. நாகராஐன் அவர்களின் தேன் தமிழ் நடையில் வெளிவந்த பக்தியுடன் கூடிய படங்கள் எல்லாமே எங்க காலத்தில் வெளி வந்தவைகள்தான்..எல்லா படத்திலும் எல்லா பாட்டும் இன்னைக்கும் என்னைக்கும் மனசிலே நிற்குமே.

ஆயிரத்தில் ஒருவனா? எங்க வீடடுபிள்ளையா? எங்கள் தங்கமா? எம்.ஜி.ஆரின் படமென்றால் முதல் நாள் அல்லது இரண்டாம் நாள் பார்த்தால்தான் பசியே தீரும். அதுவும் எங்கள் ஊரில் நான் எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற பொருளாளர் ஆயிற்றே. பூந்து விளையாடி இருக்கோம்ல்ல. கொட்டும் முழக்கோடு ஊர்வலமா சென்று கொடி கட்டி இனிப்பு வழங்கி பேனர் கட்டி பார்த்து ரசித்திருப்போம். படத்தில் எல்லோரும் நடிப்பார்கள்..இப்போ எல்லோரும் துடிக்கிறார்கள். நீங்க சுறாவை பார்த்திட்டு வந்த கடுப்பில் இருப்பீர்கள்.. நான்வேற கடுப்பை ஏற்றி விட்டால் எக்கு தப்பா ஏதாவது ஆகிப்போச்சுன்னா? மே .18.க்கு பின்னால மனது இருகி போய்கிடக்கிறோம்..என்ன நடந்தாலும் ஒண்ணும் ஆகாது..அப்படிங்கிறீங்களா? அதுவும் உண்மைதான்.. நான் வரட்டுங்களா......