Friday, October 1, 2010

ரியல் எஸ்டேட் பிசினஸ்...


கொட்டக்காடு, கோமுட்டி தோட்டம், சாமியங்காடு, குளக்காடு, பாலமரத்துக்காடு, பனைமரத்துத் தோட்டம், ஓட்டையங்காடு, சின்னக்குரை, அனுப்புச்சிகாடு என்னுங்க இது? நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறப்ப... அதாவது 1965/1975 வருடங்களில் இந்த பெயர்களில் விளங்கிய விளைநிலங்கலெல்லாம், அண்ணா நகர், கண்ணன் நகர், சென்னியப்பா நகர், ஹவுசிங் யூனிட், லாயர்ஸ் காலனி, லட்சுமி நகர், ஜீவா நகர் என பெயர் மாறி கான்கீரீட் பயிர்களா உருமாறி காட்சியளிக்குது. என்னைப்போல் உள்ளவங்களுக்கு அந்த காடு தோட்டம் கண்ணுக்குள் வந்து போகுது.

நல்ல விவசாய பூமியெல்லாம் கண் முன்னே கான்கீரிட் பூமியாகுது. அதுமட்டுமல்ல காடு மேடெல்லாம் கல் நட்டு சைட் போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் அங்கிகெனாதபடி எங்கும் பிரகாசமாய் கொடிகட்டி பறக்குது. ஆளப்பிறந்த பாதி பேருக்கு இது தான் வேலை. மீதிப்பேருக்கு என்ன வேலை. அதை நீங்கதான் சொல்ல வேணும். இந்த பூமி பெயர்களுக்கெல்லாம் ஒரு கதை சொல்லுவார்கள். அதை கேட்கவே சுவராசியமாக இருக்கும். ஊருக்கு ஊரு அண்ணா நகர். நம்ம அண்ணாவை நினைத்து பெயர் வைத்தார்களா? சைட் போட்டவரு அவுங்க அண்ணனை நினைத்து பெயர் வைத்தாரா? ஒண்ணுமே புலப்படவில்லை.

அதாவது பரவாயில்லை..சென்னியப்பன், சம்பத்(இது வேறு சம்பத்துங்கோ) இவுங்க உல்லாம் யாரு? அப்படின்னு என் பேரன் கேட்டால் நான் ஒரு சொல்லணுமே. நம்ம ஊரை கண்டு பிடித்ததே அவுருதான் அப்படின்னு புதுக்கதை ரெடி பண்ணி வைக்க வேண்டும். சரி விவசாய நிலங்களெயெல்லாம் கூறு போட தடை போடுங்க என்று நமது அரசாங்த்திடம் யாராவது ரகசியமாக சொல்லுங்களேன். அதுக்கெல்லாம் அவுங்களுக்கு நேரம் ஏது? அதுவும் சரிதான்.

நம்ம சங்கதிக்கு வருவோம். இப்போ நமக்கு புது சிக்கல் ஒண்ணு உருவாயிருக்கு. நம்ம பேரருக்கு பெயர் வைக்க வேண்டும். நம்ம பேரர் எதிர் காலத்தில் உங்களைப்போல பதிவு திலகமா திகல வேணுமல்ல. அன்பை புகட்ட நானும்...அதுதானுங்க செல்லம் கொடுக்கறது. அறிவை புகட்ட எனது மகளும் மருமகரும் இருப்பார்கள்.

பெயர் வைக்கிற பொறுப்பை நம்ம கிட்ட ஒப்படைத்து விட்டார்கள். என் மூத்தமகள் பெயர் வித்தியப்பிரியா, இளையவள் தமிழினியா. பெரியவள் சொல்கிறாள்.. பெயர் வைத்தே என்னை பழி வாங்கி விட்டீர்களே அப்பா...‘ஆங்கில அகர வரிசையில் வி..எங்கும் கடைசி..எங்கும் காத்திருப்பதே சோதனையா போகிவிட்டது‘ என்று. அதனால் என் அன்பிக்குரிய இணையச்சொந்தங்களே நல்ல தமிழ் பெயராக சொல்லுங்களேன், உங்களிடம் கேட்கச் சொல்லி என் மகள்தான் சொன்னாள். நம்பிக்கையுடன் சான்..பிளாக் எதுக்கெல்லாம் பயன்படுது என எல்லோருக்கும் புரிய வைப்போம்..தெரிய வைப்போம்.

அன்புடன் சூனா பானா.

Tuesday, September 21, 2010

இந்த கதை எப்படி?

வாழ்க்கை ஒரு போராட்டம் பல பேருக்கு. வாழக்கை ஒரு தேரோட்டம் சில பேருக்கு. இந்த காலத்தில் பெண்ணை பெத்தவங்க பெண்ணை வளர்த்தி படிக்க வைச்சு, வேலைக்கு அனுப்பி அழகு பார்த்து, ஆளானதும் இனி நாம துள்ள முடியாதே என வருத்தப்பட்டு பின்பு மகிழ்ந்து..காலம்ஓட...பொண்ணு ஜாதகத்தை எடுத்து சோசியம் பார்க்க அலைந்து நல்ல வரன் கிடைக்க வேண்டி..பெண்ணின் ஜாதகத்தை நகல் எடுத்து விநியோகித்து....நல்ல ஜாதகம் இருக்குது அப்படீன்னு தகவல் வந்தா மனசு இறக்கை கட்டி பறந்து...

பொண்ணு பார்க்க வராங்கன்னு தெரிந்தா மகிழ்ச்சியா எதிர் நோக்கி..அவர்களுக்கு பிடித்தா நமக்கு பிடிப்பதில்லை...நமக்கு பிடித்தா அவர்களுக்கு பிடிப்பதில்லை என சலித்து...கையில் இருக்கும் காசுயெல்லாம் கரைந்த நிலையில் பக்கத்து வீட்டு வரனே வந்து கதவைத்தட்ட, தடபுடலா திருமணத்தை நடத்த எண்ணி...காஸ்ட்லியான கல்யாண பத்திரிக்கையில் ஆரம்பித்து..இது நமக்கு தேவையா என யோசித்து..கல்யாணம் முடிந்து..அப்பாடாயென உட்கார்ந்தா..அப்பத்தான் கடமையே தொடங்குதாம்.. எல்லாம் இருக்குதுன்னு அக்கா (சம்பந்தி) சொல்லுவாங்க. என்னதான் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரும் நல்லவங்களா இருந்தாலும் நம்மாலை இருக்க முடியுதா?

அருவாமனையிலிருந்து கறிவேப்பிலை வரை பார்த்து பார்த்து வாங்கி தனிக்குடித்தனம் வைத்து ...அடிக்கடி விசிட் செய்து .. விசிட் செய்யும் போதெல்லாம் லக்கேஜ்களுடன் மகள் குடித்தனம் நடத்தும் அழகை பார்த்து ரசித்து திரும்பினால்..மகளிடம் இருந்து அம்மாவுக்கு சிறப்புச் செய்தி...நாட்கள் தள்ளிபோய்விட்டது என்று...உடனே இந்த அம்மா மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்து...போன வாரந்தானே திரும்பினோம்..மறுபடியும் துணைக்கு கெளரவ அழைப்பாளரா நம்மையும்....

காசை செலவழித்தால் மட்டும் போதாதுங்க..கால முழுவதும் பொண்ணுக்கு நாமதான் துணையிருக்கணும்..அதுதான் கெளரவம்..பாசம்...அப்படின்னு நமக்கே வகுப்பு எடுத்து...மருத்துவ பரிசோதனையில் ஆரம்பிக்கும் செலவு...அடுத்து வளைக்காப்பு..நமக்கு எதிரி வருகிற சம்மந்தியோ..மாப்பிள்ளைகளோ அல்ல...நம்ம வீட்டு தெய்வங்கதான்...வளைக்காப்புக்கு இத்துணை பவுனுக்கு வளையல் போடவேணும் என தூண்டில் போட்டு மீனைப்புடித்து சாதித்து..வளைக்காப்புக்கு எத்தனை பேரை அழைப்பது..எப்படி சமையல்..எங்கு விழா?..என ஒரு மினி திருமணமே நடத்தி..அப்பாடா என இருக்கமுடியுதா?

எப்படா வரும் மகப்பேறுநாள் என எதிர்பார்த்து ..மகளுக்கு வலி என அறிந்ததும் அத்தனையும் மறந்து ஆளாய் பறந்து..எவ்வளவு பணம் செலவானலும்..என் மகளுக்கு வலியே தெரியக்கூடாது...என மருத்துவத்திற்கே மருத்துவம் பார்த்து....அஞ்சு நிமிடத்தில் அழுகை சத்தம்.... அனுபவித்தவர்கள் நினைத்து பாருங்கள்.. அனுபவிக்காதவர்கள் கால ஓட்டத்தில் கண்டிப்பாக அனுபவிக்க வாழ்த்துக்கள்...

என்னடா இது முற்றுப்புள்ளி வைக்காமையே கதை எழுதி கிழித்திருக்காரு.. அப்படீன்னு யாராவது நினைக்க போறீங்க..மூச்சு விட முடிந்தா தானே முற்றுப்புள்ளி வைப்பது. நேத்து ஆரப்பிச்ச மாதிரி இருக்குது. நேற்று பொண்ணு சொல்லுது ‘பிறந்தது பொண்ணா இருந்திருந்தா..பேசாம உங்க பராமரிப்பிலேயே விட்டுவிடலாம் என்று இருந்தேன்.. பையனா போச்சே.. உங்களை நம்மி விட முடியாது..செல்லம் கொடுத்தே கெடுத்து விடுவீர்கள்’ என்று. இந்த காலத்திலே பையனைத்தான் பொத்தி பொத்தி வளர்க்கணும்..அன்பால கட்டிப்போட்டு அறிவை புகட்டணும். அப்பத்தான் உங்களை மாதிரி அம்மா பேச்சை தட்டாம கேட்கிற மாதிரி என் மகன் அவன் மனைவி பேச்சை ஆயுள் முழுவதும் கேட்பான் அப்படீங்குதுங்க.. எப்படி இருக்குது கதை.. வணக்கமுங்க.



Monday, September 13, 2010

உறவுகள் எத்தனை...


தினமும் இணையத்தில் ஒவ்வொருத்தருடைய பதிவுகளை படிக்கும்போதும் அடடே..இவுங்க இப்படி சிந்தித்திருங்காங்களே.. நமங்கு எங்கே போச்சு புத்தி? (மரியாதையா சொன்னா அறிவு..) நமக்கும்தானே அந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கு.. ஆனா அதை ஏன் பதிவா போடலை? போடலாம்ன்னு நமக்கு ஏன் தோணலை? சரி போனது போகட்டும் இன்று பதிவு போட ஏதாவது அனுபவம் கிடைக்குமா? என ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டியது..அங்கே போய் பார்த்தா நம்ம அனுபவத்தையே ஒருத்தர் அனுபவித்து எழுதிருப்பார்...நடுரோட்டிலே லிப்ட் கேட்ட ஒருவன் வழிப்பறியா இருப்பானோ? என நமது மனது நினைப்பதைக்கூட பதிவில் தொட்டுப்பார்க்க கதிர்களால் முடிகிறது. ஏன் நம்மால் முடிவதில்லை..இப்படியே காலத்தை ஒட்டாம...நிகழ்வு ஒன்றை பதிவு செய்வதாக முடிவு செய்தாச்சு..

ஒவ்வொருவரும் பிறந்தவுடன் பல உறவுகள் உண்டாகிறது. அம்மா அப்பாவுக்கு மகனாகிறோம், நமக்கு முன்னே நமது பெற்றோர்களுக்கு பிறந்தவங்களுக்கு தம்பியாகிறோம், தாத்தா..பாட்டிக்கு பேரனாகிறோம், அப்படியே உறவுகள் தொடர்கிறது. பெற்றோர்கள் வைக்கும் பெயருக்கு சொந்தகாரர்களாகிறோம், பள்ளி பருவத்தில் நண்பனாகிறோம், தில் இருந்தா காதலனாகிறோம், கல்யாணம் பண்ணிக்கிட்டா கணவராகிறோம். அதனை தொடர்ந்து உறவுகள் மாமன், மச்சான் என ஓட்டிக்கொண்டு உறவாடி மகிழ்ந்து போகிறோம்.

நமக்கென குழந்தைகள் பிறந்தவுடன் அப்பாவாகிறோம். அந்த குழந்தைகளுக்கு மணம்முடித்தவுடன் சம்மந்தியாகிறோம். நமது குழந்தைகளுக்கு குழந்தை பிறந்தவுடன் தாத்தா..பாட்டியாகிறோம். முதலில் மகன் என்ற உறவுடன் வந்த நாம்.. தாத்தாவாகி ஓய்வு பெறுகிறோம். என்ன இது? ஆமாங்க..செப்டம்பர் இரண்டில் எனது மகள் ஆண்குழந்தையை பெற்றெடுத்து என்னை ‘தாத்தா’ ஆக்கிவிட்டாள்..




Monday, August 9, 2010

ஏலம் எடுத்த கதை...

அய்யா வணக்கம். ஞாயமா அய்யோ வணக்கமுன்னு தான் ஆரம்பித்து இருக்க வேணும். ஏன் என்றால் நான் சொல்லப் போகும் கதை அப்படிப்பட்டதுங்க. போன வாரம் பேப்பரில் ஒரு விளம்பரம். பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நாங்க எங்க பேப்பர் பார்க்கிறோம்? இந்த இணையத்தில் இணைந்ததிலிருந்து பேப்பராவது ஒண்ணாவது. ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு அந்த காகிதத்தை கண்ணுலை பார்த்தாத்தான் பொழுதே விடியுது. அப்படி ஒருபழக்கம் ஏற்பட்டு இருக்குது.

விளம்பரத்துக்கு வருவோம். அரசு அலுவலகம் ஒன்றில் அலுவலர்கள் பயன்படுத்திய வாகனம் ஏலம் விடுவதாகவும், ஏலம் எடுக்க விரும்புவோர்கள் இன்ன தேதியில் இத்தனை மணிக்கு அலுவலகம் வந்து ரூ.5000 பிணையத் தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் கேட்கலாம்...என்ற விளம்பர அறிவிப்பு. இதைப் பார்த்த எனக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர் உடனே என்னை அழைத்து, ‘உங்களுக்கு இந்த அலுவலக நடைமுறை ஓரளவு தெரியுமே, நீங்கள் ஏலத்தன்று சென்று பிணைய தொகை கட்டி எப்படியாவது அந்த வாகனத்தை ஏலத்தில் இன்ன விலைக்கு தோதா வந்தா எடுத்து வாருங்கள்’ எனக்கூறினார்.
நானும் ஆகா!! நம்மையும் நம்பி இப்படி ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறாரே!! வேலை இல்லாதற்கு இது ஒரு நல்ல வேலைதான் என்று எண்ணிக் கொண்டு ஏலத்தன்று ஜம்மென்று புறப்பட்டேன்.

நம்ம பிரமுகரும் நம்மை எதிர்பார்த்து காத்திருந்தார்.

‘அய்யா வணக்கம். வண்டியை போயி பார்த்திர்களா?’

‘ஆமாங்க...நல்ல நெம்பர்.. இன்ன விலைக்கு வந்தா எடுக்கலாம்.. நம்ம வாகன ஓட்டியை அனுப்பி வண்டியை பார்த்து விட்டேன்’ என்றார். ‘இன்ன விலைக்கு வந்தா எடுங்க’ என தொழில் நுட்ப ஆலோசனை வழங்கி..தேவையான பணத்தையும் கொடுத்து அனுப்பினார். துணைக்கு தொழில்நுட்ப பணியாளர் வாகன ஓட்டுனர். அலுவலகம் சென்றோம்.

நல்ல நேரம் பார்த்து முன் பிணைய தொகை ரூ.5000 செலுத்தி காத்திருந்தோம். ஏல நேரம் மதியம் மணி 3.00. சரியாக மணி 2.40. ஏலம் நடக்கும் அறை முன்பு கூட்டம் கூடியது. நாங்களும் சென்றோம். அப்போது ஒருவர் கூறினார்..EMT (முன் வைப்பு தொகை) செலுத்தியவர்கள் மட்டும் இருங்கள். மற்றவர்கள் ஒதுங்குங்கள்..எனக்கூறினார். அப்போது தான் தெரிந்தது என்னையும் சேர்த்து 22 நபர்கள் EMT கட்டியிருக்கிறார்கள். அப்போது ஒருவர் கூறினார்...‘எல்லோரும் நல்லா கவனிங்க, ஏலம் கேட்டு கவர்மெண்டுக்கு வீணாக காசை கட்டுவதற்கு EMT கட்டியவர்களுக்கு ஆளுக்கு ரூ.1500 தருகிறேன் எல்லோரும் வாங்கி கொண்டு சென்று விடுங்கள்’ என்று.. நானும் கூறினேன்..நான் வேணும்ன்னா ஆளுக்கு ரூ. 1500 தருகிறேன் எனக்கூறினேன். அதில் இன்னொருவர் கூறினார் நான் ஆளுக்கு ரூ.2000ஆக தருகிறேன்... என்று. இதெல்லாம் முடியாது. ஏலமே கூறிக்கொள்ளலாம்..எனக்கூறிக்கொண்டு ஏல அரங்குக்குள் சென்றோம்.

அப்போது உடன்பிறப்பு சீருடையில் நானும் பணம் கட்டியுள்ளேன் என உடன்பிறப்பு வந்தார். ஆளுக்கு ரூ.2500 தருகிறேன் பேசாம வாங்கிட்டு நடையை கட்டுங்க..மீறி ஏலம் கூறினா..என்ன நடக்கும்.. அப்படிங்கிறதை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள் என அறிவித்தார். ஆளாளுக்கு போட்டி போட்டு கொண்டு ரூ.2500 வாங்கி கொண்டு உடன்பிறப்பை தன் ‘உடன்பிறப்பா’ எண்ணி ‘வாழ்த்தி’ச் சென்றார்கள். நாம ஒரு கணக்கு போட்டோம். வாகனத்திற்கு அரசு விலை ரூ.37000.. அதனுடன் ரூ.1000 சேர்த்து ரூ.38 ஆயிரம் அலுவலகத்தில் செலுத்த வேண்டுமாம்.

உடன்பிறப்பையும் சேர்த்து 22 ல் ஒண்ணு போக 21க்கு தலா ரூ.2500..மொத்தம் ரூ.52500.. அலுவலகச் செலவு ரூ.10000 என ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாம். அதையும் சேர்த்து 38+52500+10 ஆக மொத்தம் ஒரு லட்சத்து ஐநூறு. நம்ம இலக்கு மீறி போனதாலும், உடன்பிறப்பின் மேல் உள்ள பாசத்தினாலும் (பயம் என நினைத்து உடன்பிறப்பின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தினால் நான் பொறுப்பல்ல) ரூ.2500 அன்புடன் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன்.

அய்யா நம்ம கதையில் வந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையே..உண்மையை தவிர வேறில்லை.. அரசின் மானம் மரியாதை கருதி அலுவகத்தின் பெயர் பதிய படவில்லை. கொள்முதல் ரூ.5000 லாபம் ரூ.2500.. அலுவலகத்தை பார்த்து நின்னு ஒரு ராயல் சல்யூட் அடித்து விட்டு வந்தேன். ரூ.5000 மூலதனத்தில் மூன்று மணிநேரத்தில் ரூ.2500 லாபம். நல்ல வேலையா இருக்குதுல்ல..

அடுத்து வாகன ஏலமின்னு பத்திரிக்கையில் வந்தா சொல்லி அனுப்புகிறேன். மறக்காம வாங்க..எல்லோரும் சேர்ந்து கவர்மெண்டை வாழ வைப்போம்ங்க..


Tuesday, July 27, 2010

சென்னைப்பட்டினம் வருகிறேன்ங்க...


அன்புக்குரிய சொந்தங்களே..வணக்கம்.

நான் எதிர்வரும் ஆகஸ்ட் ஒண்ணாம் தேதி சென்னைப்பட்டினம் வருகிறேன். நம்ம நண்பர் பொண்ணு பணியில் சேர்வதற்காக அவருக்கு துணையா இவரு..இவருக்கு துணையா நீங்க இருப்பீங்க என்ற நம்பிக்கையில். சென்னை எனது பார்வையில் எழுத வேண்டும் என்றால், இது வரை ஒருபத்து பதினைந்து தடவை வந்து சென்று இருக்கிறேன். சென்னை போகிறோம் என்று சொன்னாலே அப்படி ஒரு கிக்கில்ல ஏற்படுது. எப்ப எப்ப சென்னை போனோம்.. எதற்கு போனோம்.. முதன் முதலில் எப்ப போனோம்.. உயிரினும் மேலான உடன் பிறப்பே.. அப்படின்னு அன்பா அழைப்பதாக எண்ணி ஓடோடி வந்த ஞாபகமெல்லாம் வருது.

ஒவ்வொரு தடவையும் வரும்போது எங்களைப்போன்ற ஆட்களுக்கு கண்ணை கட்டி ஆற்றில் விட்ட மாதிரியல்ல இருக்கு. அதனால இணைய உறவுகள் வழி காட்டும் என்ற நம்பிக்கையில் வருகிறேன்.. எனது தொலை பேசி..9842087277.