Friday, April 2, 2010

பொண்ணு பார்த்த கதை...

பொண்ணு பார்த்த கதை... ஒண்ணு நம்மகிட்டவும் இருக்குதில்ல...

ஆனா இது நம்ம கதை இல்ல. பொண்ணு பார்த்து கல்யாணம் கடடிக்கிற பாக்கியமெல்லாம் நமக்கு இல்லாம போச்சு. சின்ன வயசிலிருந்து பார்த்துகிட்டே இருந்த பொண்ணை காலம் முழுவதும் பார்த்துக்கோ அப்படீன்னு நம்ம கையிலே பிடித்து கொடுத்திட்டாங்க... இதனால்தான் வாழ்க்கையே தடம் மாறிப்போச்சு. என் வீட்டுக்காரிய வலுக்கட்டாயமா நான் கூட்டிக்கிட்டு போன ஒரே சினிமா முந்தானை முடிச்சு. அன்னைக்கு அது சொல்லுச்சு... இந்த வேளையெல்லாம் இன்னையோட விட்டுறுங்க..அப்படின்னு. அன்னைக்கு விட்டவன்தான்....அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் குடும்பம் ..குடும்பம் சார்ந்த உறவுகள்..குழந்தைகள் நலன்....அதனால் தான் அய்யா ஜாலியாக காலம் தள்ள முடிந்தது. இல்லையின்னா ஐம்பத்தெட்டு வயசுல்ல பொண்ணு பார்த்த கதை எழுத முடியுமா? கதைக்கு உதவாதது எதற்கு...நம்ம கதைக்கு வருவோம்.

எங்க ஊரில் எனது பெரியப்பா குடும்பம் மணியகாரர் குடும்பம். அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லை. நான்கு பெண்கள் மட்டுமே. மூத்த அக்காவுக்கும் அடுத்த அக்காவுக்கும் ஒரே சமயத்தில் மாப்பிள்ளைகள் பார்த்து திருமணம் நிச்சியக்கப்பட்டது. சின்ன அக்காவுக்கு உறவுக்குள்ளேயே ஒரு மாப்பிள்ளை . பெரிய அக்காவுக்குத்தான் அசலூர் மாப்பிள்ளை. பெரியவர்களா பார்த்து முடிவு செய்து விடுவார்கள். பெண் பார்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. நிச்சயத்திற்கு முன்பு தனது சாமர்த்தியத்தை உபயோகப்படுத்தி மாப்பிள்ளை பெண்ணை பார்த்தால் தான் உண்டு. நிச்சியத்தன்று கூட மாப்பிள்ளை வர மாட்டார். மாப்பிள்ளையும் பெண்ணையும் கருத்து கேட்கின்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் மாப்பிள்ளைகள் தங்கள் வீர தீர செயல்களின் மூலம் பெண்ணை பார்த்து விடுவார்கள். அந்த காலத்தில் கிராமப்புறங்களில் ஒருசில குடும்ப பெண்கள் வீட்டை விட்டு வெளியேயும் வர மாட்டார்கள். எப்படி பெண்ணை பார்ப்பது??... எங்க மாப்பிள்ளை கதை இப்படி......

பகல் நேரங்களில் தங்களது வீட்டில் திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் தோழியர் சூழ விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உதவிகளுக்கு எங்களைப்போன்ற தம்பிகள். அதுபோன்ற ஒரு நாளில் வீதியில் சேலை வியாபாரி ஒருவர் சேலை சேலை என கூவி விற்று கொண்டு சென்றார். கல்யாணப் பெண்களுக்கு சேலை வாங்க வேண்டும் என்ற ஆசை. அக்கம்பக்கத்து பெரிசுகள் விடுதா... என்னை அழைத்து...டேய் அப்பா..கூப்பிடடா சேலை வியாபாரியை எனச்சொல்ல நான் அதற்காகவே காத்திருந்தவன் போல...டூர்ர்ர்ர்ர்ர்...என ஓடி சேலை வியாபாரியை பிடித்து வந்தேன். அவரும் எந்த தெருவுக்கும் போகாமல் எங்க வீதியையே சுற்றி சுற்றி வந்தார். பவ்வியமாக வந்த அவரும் சேலைக்கட்டை கீழே இறக்கி வைத்து நல்ல கைதேர்ந்த சேலை வியாபாரி போல் சேலைகளை எடுத்து வைத்தாரு. சேலைகளை எடுத்து பார்த்த பெரிசுகளும் அக்காகளும்.. பிடித்த சேலைகளுக்கு விலையை கேட்க.... விலை என்னுங்க விலை... எதுபிடிக்கிறதோ அதை எடுத்துங்கோ ..என அவர் அன்பை அள்ளி விட.. அது தான் சமயம் என்று அடிமாட்டு விலைக்கு அக்காக்கள் கேட்க.. அவர் மறுப்பது போல் நடிக்க ..சேலை வியாபாரம் கேலியும் கிண்டலுமாக கலைகட்டியது. கடைசியில் அக்காக்கள் கேட்ட விலைக்கே இரண்டு சேலைகளை கொடுத்து விட்டார். சேலை வியாபாரிக்கு மோர் கொடுத்து அனுப்பி வைத்தோம்.

அதற்கு பின்பு நிச்சியம் முடிந்து முகூர்த்த நாளும் நெருங்கியது. கல்யாண வீடும் கலைகட்டியது. பந்தல், தோரணம், மேளம், தாளம்.... மாப்பிள்ளை குதிரை மேல் வருதல் என்ற சிறப்பு சீர் வரிசை.... மின் விளக்குகள் எட்டி பார்க்காத அந்த நாளில் ஏகாளி தீ பந்தம் பிடிக்க அந்த ஒளியில் தான் மாப்பிள்ளை அழைப்பு...மாப்பிள்ளையை யாரும் சரியாக பார்க்க முடியவில்லை. நம்ம வீட்டுக்கு வருகின்ற மாப்பிள்ளை தானே காலையில் நல்லா பார்த்துகிட்டாபோச்சுன்னு இருந்திட்டேன்....

அதிகாலையில் சுற்றமும் நட்பும் சூழ்ந்து நிற்க சுப மூகூர்த்தம். வலுக்கட்டாயமா என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி புது சட்டையெல்லாம் போட்டு மணவறைக்கு அழைத்து வந்தார்கள். அய்யா அப்பத்தான் மாப்பிள்ளையை நல்லா பார்த்தேன். பார்த்த உடனே .. மாப்பிள்ளை என்னை பார்த்து மொரைத்தார் . நான் மாப்பிள்ளையை பார்த்து போட்டு உடனே.. அக்கா.. மாப்பிள்ளை அன்னைக்கு வந்த சேலை வியாபாரி அக்கா..என ஒரே கத்து. அருகில் இருந்த மாப்பிள்ளை நண்பர் ஒருவர் என் வாயை பொத்தி அப்படியே அலேக்கா தூக்கிட்டு போயே போயிட்டாரு.

அதற்கு பின்பு மச்சான் தன் சாமர்த்தியத்தை சொல்லிச் சொல்லி மாப்பிள்ளை உறவை மணக்கச் செய்தது மறக்கவே முடியாத நினைவுதானே. அதற்கு பின்பு அந்த மச்சான் மேல் உறவுகள் கேலி செய்து விளையாடிய, மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் எழுதிப் புரிய வைக்க முடியாது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடை பெற்ற இந்த நிகழ்வை நினைக்க செய்த பொண்ணு பார்த்த கதை சொன்ன .....ராணிக்கு நன்றி.


28 comments:

நாடோடி said...

பொண்ணு பார்த்த‌ க‌தையும், நீங்க‌ மாப்பிளையை பார்த்த‌ க‌தையும் சூப்ப‌ர்..

பழமைபேசி said...

கதைய வந்து படிக்கிறன்...

சந்தனமுல்லை said...

hmm...interesting

Unknown said...

பொண்ணு பாத்த கதைய விட நீங்க ஊட்டுகாரிகோட பார்த்த முந்தானை முடிச்சு சினிமா மேட்டர் தானுங்கோ சூப்பரு. இந்த வேலையெல்லா இன்னையோட உட்டுருங்க அப்பிடின்னு சொன்னாங்கல்லோ அங்க நிக்கறாங்க உங்க துணவி.

\\இல்லையின்னா ஐம்பத்தெட்டு வயசுல்ல பொண்ணு பார்த்த கதை எழுத முடியுமா? //

அன்புடன்
சந்துரு

துபாய் ராஜா said...

அப்பப்ப பழைய கதைகளை எடுத்து உடுங்கய்யா... :))

ப.கந்தசாமி said...

கதை சூப்பர்.

vasu balaji said...

எங்கயோ கூட்டிப் போயிட்டீங்கண்ணே:)

Chitra said...

மாப்பிள்ளை பார்த்த கதை - மாப்பிள்ளை, சேலை வியாபாரியாய் வந்து பொண்ணு பார்த்த கதை - நீங்கள் உங்கள் மனைவியுடன் "முந்தானை முடிச்சு" கதை........ அருமை, அருமை, அருமை.

பழமைபேசி said...

அண்ணா....ம்ம்...தொடருங்க...

Unknown said...

//பழமைபேசி said...

அண்ணா....ம்ம்...தொடருங்க...\\

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், ஏனுங்க பழமை நீங்க முந்தானை முடிச்சு சினிமா பாத்தீங்களா இல்லையா?

அன்புடன்
சந்துரு

Unknown said...

//பழமைபேசி said...

அண்ணா....ம்ம்...தொடருங்க...\\

அதெப்பிடிங்கண்ணா கதைய வந்து படிக்கிறன்னு சொல்லிப்போட்டு தலைவருகிட்ட ம்ம்..தொடருங்க அப்படின்னா நாங்க பள்ளயத்தானுங்க நினைப்போம்.
அன்புடன்
சந்துரு

தமிழ் உதயம் said...

ஞாபகங்களை பங்கிடுவதில் அலாதி சுகம் உள்ளது. பொண்ணு பார்த்த கதையை சுவைத்தோம்.

ஈரோடு கதிர் said...

//பொண்ணு பார்த்த கதை... ஒண்ணு நம்மகிட்டவும் இருக்குதில்ல...//

ஒரு பொண்ணுதான் பார்த்தீங்களான்னே

ஈரோடு கதிர் said...

//என் வீட்டுக்காரிய வலுக்கட்டாயமா நான் கூட்டிக்கிட்டு போன ஒரே சினிமா முந்தானை முடிச்சு. //

கொஞ்ச நஞ்ச லொல்லு இல்லீங்கோவ்

ஈரோடு கதிர் said...

//சேலை வியாபாரிக்கு மோர் கொடுத்து அனுப்பி வைத்தோம்.//

அடப்பாவி மக்கா...
அப்போ பணம் கொடுக்கலையா?

சிநேகிதன் அக்பர் said...

அட இது மிக அருமையா இருக்கே சார்.

வலைச்சரத்தில் உங்களை குறிப்பிட்டுள்ளேன். கருத்து சொல்லுங்கள்.

குலவுசனப்பிரியன் said...

நல்லா இருக்குதுங்கய்யா உங்க கதை. முடிஞ்சா என் வீடியோ விடு தூது-வையும் படிங்க.

ஜெய்லானி said...

ஒரு கதைக்குள்ள மூனு குட்டிக் கதை , அடேங்கப்பா!! நல்லா இருக்கு.

தாராபுரத்தான் said...

நல்லா இருக்குதுன்னு ஊக்கப்படுத்திய......1.நாடோடி.... ( முதல் பரிசு)..2. பழமை பேசி..(இரண்டாம் பரிசு) ..3.சந்தன முல்லை..(மூன்றாம் பரிசு)..4.தாமோதர் சந்துரு..(சிறப்பு பரிசு).....5. ஈரோடுகதிர்..(ஆறுதல் பரிசு)மற்றும் (கெளரவ பரிசு பெறுபவர்கள்)..6. துபாய் ராஐா....7.Dr.P.k.....8.வானம் பாடிகள்...9.சித்ரா...10.தமிழ் உதயம்...11.அக்பர்.....12.குலவுசனப்பிரியன்...13.ெஐய்லானி....ஆக மொத்தம் பதிமூன்று பேர்களும் எனது பெயரைச் சொல்லி அவர்அவர் வீட்டில் பரிசுகள் பெற்றுக்கொள்ள பாசமுடன் கேட்டுக் கொள்கிறேன். வீட்டுக்கு தெரியாமல் வந்திருந்தால் நான் பொறுப்பல்ல....இரண்டாம் பந்திக்கும் வந்த பழமை பேசி.. தாமோதர் சந்துரு..ஈரோடு கதிர்...இவர்களை தனியாக கவனிக்க சொல்லி இருக்கிறேன். ..தப்பா எடுத்துக்காதீங்க.. பாராட்டு மழையில் நனைந்த மகிழ்ச்சியில்.....நன்றிங்கோ....

பிரேமா மகள் said...

ஹை,, தாத்தா... உங்க மச்சான் குசும்பு சூப்பர்.. நானும் என்னை பொண்ணு பார்க்க வந்த கதையை எழுதப் போறேன்..

Ahamed irshad said...

நல்ல ஆக்கம் அய்யா, பகிர்வுக்கு நன்றி..

Paleo God said...

அய்யா, சூப்பருங்கோவ்..!
:)

ஹுஸைனம்மா said...

நல்ல சுவாரஸ்யமா இருந்துதுங்க.

ரோஸ்விக் said...

இது தான்யா சுவாரஸ்யம்... இப்ப அந்த சுவாரஸ்யம் இல்லாமப் போச்சுங்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகா எழுதி இருக்கீங்க. அந்த கால கதை கேட்டது புதுசா இருந்தது... பகிர்ந்ததுக்கு நன்றி

Nathanjagk said...

பொண்ணு பார்ப்பது காஸ்ட்லிதான். பாவம் உங்கள் மச்சான் எத்தனை ​சேலைகள் வாங்கினாரோ?

:))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கதை ரொம்ப அருமை.. இனிமையான நினைவுகள்..
நீங்க மாப்பிள்ளையை அடையாளம் கண்டு சொன்னது சூப்பர்..
வாழ்த்துக்கள்..

சாமக்கோடங்கி said...

நல்ல நினைவுகள்...

வெளிநாட்டினர் நம் நாட்டில் பார்த்து ஆச்சிரியத்திற்கு உள்ளாகும் சில விஷயங்களில், நம் திருமணங்களும், பெண் பார்ப்பதும் முக்கியமானவை.. எப்படி பார்க்காமலேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு காலம் பூராவும் பிரியாது வாழ்கிறீர்கள் என்றே வினவுகின்றனர்...

நன்றி..